Monday 25 April 2011

ஏழை ஹெட்டியும் யூதர்களும்

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த காலத்தில் இருந்தே யூதர்கள் "புதிய பூமி"யில் சென்று குடியேறி இருந்தனர். ஹெயிட்டி அமைந்திருக்கும் ஹிஸ்பானியோலா தீவுக்கு, கொலம்பசுடன் ஒரு யூத மொழிபெயர்ப்பாளரும் சென்றிருக்கிறார். அன்றைய ஸ்பானியாவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் யூதர்களை வேட்டையாடி கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ அடக்குமுறைக்கு தப்பிய யூதர்கள் பலர், கடல் கடந்து ஹெயிட்டியில் வந்து குடியேறினார்கள். ஹெயிட்டியில் வாழ்ந்த யூதர்கள் பெருந்தோட்ட தொழில் அதிபர்களாக, அடிமைகளின் எஜமானர்களாக அல்லது வியாபாரிகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்துள்ளனர். ஹெயிட்டியில் முன்னர் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளை, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள் இனவழிப்பு செய்து விட்டனர். அதனால் பிரெஞ்சுக்காரர்களால் ஆப்பிரிக்க அடிமைகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டனர்.

1685, ம் ஆண்டில், பிரெஞ்சு மன்னன் லூயி "Code Noir " சட்டத்தை பிறப்பித்தான். அந்த சட்டத்தின் படி பிரெஞ்சுக் காலனிகளில், கத்தோலிக்க சமயத்தை தவிர்ந்த பிற கிறிஸ்தவ பிரிவுகள் தடை செய்யப்பட்டன. யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஹெயிட்டியை ஆண்ட பிரெஞ்சு அதிகாரிகள் யூதர்கள் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட அனுமதித்தனர்.

1804 ம் ஆண்டு, ஹெயிட்டி கறுப்பின அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு சாத்தியமானது. ஹெயிட்டியில் இருந்த வெள்ளையினத்தவர்கள் அனைவரும் கொன்று குவிக்கப் பட்டனர். யூதர்களும் எழுச்சியுற்ற அடிமைகளின் கோபாவேசத்திற்கு தப்பவில்லை. புரட்சியினால் பெருந்தோட்டங்கள் கைவிடப்பட்டன. வர்த்தகம் தடைப்பட்டது. மிகக் குறைந்த யூதர்கள் புதிய ஆளும்வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டனர்.

19 ம் நூற்றாண்டில், போலந்து நாட்டில் இருந்து சில யூத குடும்பங்கள் ஹெயிட்டி வந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் சில யூதர்கள் துணி வியாபாரத்தின் நிமித்தம் வந்துள்ளனர். இஸ்ரேலின் உருவாக்கம், ஹெயிட்டி யூத சமூகத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தது. எழுபதுகளில் ஹெயிட்டிக்கான இஸ்ரேல் தூதுவர் யூத குடும்பங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

1968 ல் ஆட்சிக்கு வந்த கொடுங்கோல் சர்வாதிகாரி டுவாலியரின் அரசுக்கு இஸ்ரேல் ஆயுத விநியோகம் செய்ததாக ஒரு அமெரிக்க நாளேடு செய்தி வெளியிட்டது. (Christian Science Monitor,27 Dec. 1982) 1971 ல் தகப்பனின் அடிச்சுவட்டை பின்பற்றிய, டுவாலியரின் மகனின் கொடுங்கோல் ஆட்சி தொடர்ந்தது. அப்போதும் இஸ்ரேலின் ஆயுத விற்பனை தொடர்ந்தது. ஹெயிட்டி மக்களை கொடூரமாக அடக்கி ஆண்ட சர்வாதிகாரிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்த விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. பல ஆயுத தளபாடங்கள் நீண்ட கால தவணைக் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டன. ஏழை ஹெயிட்டியர்கள், தங்களைக் கொலை செய்ய வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான பணத்தை, இன்று வரை கட்டிக் கொண்டிருக்கின்றனர். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் சிறப்பு காவல்படையினர், அப்பாவி மக்களை சித்திரவதை செய்து, கேள்வியின்றி சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலைகாரப் படைப்பிரிவின் ஜெனெரல் அவ்ரிலுக்கு இஸ்ரேலில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.

1990 ல், "சர்வாதிகார பரம்பரை" ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. பொதுத் தேர்தலில் மக்களின் மனங்கவர்ந்த பாதிரியார் அரிஸ்தீத் அமோக வெற்றி பெற்றார். ஆனால் மீட்கப்பட்ட ஜனநாயகம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. 1991 இராணுவ சதிப்புரட்சியினால் அரிஸ்தீத் அகற்றப்பட்டார். இராணுவ சதிப்புரட்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர், இஸ்ரேலில் இருந்து "ஊஜி" இயந்திரத் துப்பாக்கிகள் பெட்டி பெட்டியாக வந்திறங்கின. (The Independent, 14 Oct. 1991) அந்த ஆயுதங்கள் யாவும் சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவப் பிரிவின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.

அண்மைக் காலமாக ஹெயிட்டியில் அட்டகாசம் செய்து வரும் கிரிமினல் மாபியக் குழுக்களும், அமெரிக்கா, புளோரிடாவில் இருந்து இஸ்ரேலிய ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டன. ( Jane's Intelligence Review , 1 Aug. 2005)

No comments:

Post a Comment